சென்னையிலிருந்து அந்தமானுக்கு ஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்றவர் பயணம் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து அந்தமானுக்கு ஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்ற ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணியின் விமானப் பயணத்தை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். பின்னர் அவர் விமானநிலைய போலீசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டார். சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று அந்தமானுக்கு செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் புறப்படத் தயார்நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் செல்லவேண்டிய பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, விமானத்துக்கு பயணிகளை அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது அதே விமானத்தில் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல வந்திருந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி ஆண்ட்ரூஸ் (45) என்பவரின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவரது உடைமைகளை ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்ததில், அதற்குள் ஒரு ஜிபிஎஸ் கருவி இருப்பதை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்திய விமான பாதுகாப்பு சட்டப்படி, தங்களின் உடைமைகளுடன் ஜிபிஎஸ் கருவியை விமானப் பயணிகள் எடுத்து செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதையடுத்து ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி ஆண்ட்ரூஸை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர் தான் ஒரு மாதத்துக்கு முன் ஜெர்மனில் இருந்து சென்னைக்கு சுற்றுலாப் பயணியாக வந்ததாகவும், இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு, தற்போது அந்தமான் தீவுக்கு சுற்றுலாப் பயணியாக செல்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், தான் ஜெர்மனியில் இருந்து வரும்போதே இந்த ஜிபிஎஸ் கருவியை எடுத்து வந்ததாகவும், அப்போது விமானநிலையத்தில் இக்கருவிக்கு தடை எதுவும் விதிக்கவில்லை என்றும் ஜெர்மன் சுற்றுலா பயணி ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். எனினும், அவரது விளக்கத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி ஆண்ட்ரூஸின் அந்தமான் பயணத்தை ரத்து செய்து, அவரிடம் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆண்ட்ரூஸையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் கருவியையும் சென்னை விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி ஆண்ட்ரூஸிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: