வடலூர் சத்திய ஞானசபையில் இன்று தைப்பூச விழா ஜோதி தரிசனம் நிறைவு: நாளை திருஅறை தரிசனம்

வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கடந்த 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச தினமான நேற்று காலை 6 மணிக்கு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை மற்றும் கலப்பு திரை என 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி என 5 காலங்களில் ஏழுதிரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் 6ம் காலமாக இன்று அதிகாலை 5.30 மணி அளவில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளி விட்டு 3ம் தேதி(நாளை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகத் திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறும். இதற்கு முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் அந்த பொருட்கள் பல்லக்கில் வைத்து வடலூர் கொண்டு வரப்படும். இத்துடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.

Related Stories: