திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவதூறு பேசிய முன்னாள் அமைச்சர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அம்பட்டி ராம்பாபு விமர்சனம் செய்தாராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் அவரது வீட்டை சூறையாடி அவருடைய கார்களை சேதப்படுத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் என்டிஆர் மாவட்டம் விஜயவாடா இப்ராஹிம்பட்டணத்தில் உள்ள மற்றொரு முன்னாள் அமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ஜோகிரமேஷின் வீட்டு மீது ஒரு கும்பல் நேற்று பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. வீடு முழுவதும் தீ பிடித்து எரிந்தது. மேலும் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
