விவசாயி பெயரில் போலி நிறுவனம் ரூ.14.66கோடி வரிபாக்கி இருப்பதாக நோட்டீஸ்

புடான்: உத்தரப்பிரதேசத்தில் விவசாயிக்கு ரூ.14கோடி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வந்த நிலையில் அவரது பெயரில் போலி நிறுவனம் தொடங்கப்பட்டு மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. உபியின் புடான் மாவட்டத்தின் வஜீர்கஞ்ச் பகுதியில் உள்ள குர்ராம்பூர் பமோரியை சேர்ந்தவர் விவசாயி சிங். இவருக்கு புடானில் உள்ள வருமான வரித்துறையிடம் இருந்து ரூ.1.02கோடி வரி பாக்கி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ரூ.13.63 கோடி சரக்கு மற்றும் சேவை வரி பாக்கி இருப்பதாக ஜிஎஸ்டி அலுவலகமும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் விசாரணை நடத்தி தீர்வு காணும்படி உத்தரவிட்டார். முதல் கட்ட விசாரணையில் வரி பாக்கி செலுத்த வேண்டிய நிறுவனம் டெல்லியில் இருப்பதும், விவசாயியின் ஆதார் மற்றும் பான் எண்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் விவசாயின் ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தி ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வணிக பரிவர்த்தனைகளை நடத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைபர் பிரிவில் புகார் அளிக்கும்படி அதிகாரிகள் விவசாயியை அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: