சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தாமதம்; குஜராத் பாஜக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை தொடர்பான கோரிக்கைகள் மீது முடிவெடுப்பதில் குஜராத் அரசு காட்டி வரும் தேவையற்ற தாமதத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு குஜராத் பாஜக அரசு வழங்கிய விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா மாநில அரசுக்கே விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள நிலையில், குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் அப்போது சுட்டிக்காட்டியது.

அதனைத் தொடர்ந்து, 2025ம் ஆண்டில் சிறைச்சாலைகளின் நெரிசலை குறைக்கவும், முறையான வழிமுறைகளை பின்பற்றவும் அனைத்து மாநில அரசுகளும் தெளிவான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மகேஷ் குமார் ஜாங்கிட் என்ற கொலை குற்றவாளி தொடர்ந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தனது தண்டனை காலமான 14 ஆண்டுகளை கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமே நிறைவு செய்தும், மாநில அரசு அவரது விடுதலை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘சிறைவாசிகள் 14 ஆண்டு கால தண்டனையை நிறைவு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்களின் விடுதலை குறித்த நடைமுறைகளை அரசு தொடங்க வேண்டும். நிர்வாக ரீதியிலான தாமதத்தால் ஒருவரை சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை மீறும் செயலாகும்’ என்று எச்சரித்தனர். மேலும், ‘வரும் 7ம் தேதிக்குள் மாநில அரசு இதுகுறித்து இறுதி முடிவெடுத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் குஜராத் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: