பா.ஜ வேட்பாளருடன் நெருக்கமான மம்தா தொகுதி தேர்தல் அதிகாரியை நீக்காதது ஏன்? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

கொல்கத்தா: பா.ஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரியுடன் நெருக்கமான முதல்வர் மம்தா தொகுதி தேர்தல் அதிகாரியை நீக்காதது ஏன் என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவித்த பிறகு தலைமை செயலாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அடியோடு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி தேர்தல் அதிகாரியை இன்னும் தேர்தல் கமிஷன் மாற்றவில்லை. அந்த அதிகாரி, பா.ஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரியுடன் நெருக்கமானவர் என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுபற்றி நேற்று மேற்குவங்க தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வாலிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில், ‘தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிப்பூர் தொகுதிக்கான தேர்தல் அதிகாரியின் நியமனம் ஏற்றுக்கொள்ள முடியாது. மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் சுவேந்து அதிகாரியுடன், அந்தத் தேர்தல் அதிகாரிக்கு ஆவணரீதியான நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தத் தேர்தல் அதிகாரி இதற்கு முன்பு நந்திகிராம்-II பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றியுள்ளார்; அப்போது பொது நிகழ்ச்சிகளில் சுவேந்து அதிகாரியுடன் அவருக்கு இருந்த நெருக்கம் வெளிப்படையாக உள்ளது.

வேட்புமனு பரிசீலனை, வாக்குப்பதிவு நடத்துதல் மற்றும் முடிவுகளை அறிவித்தல் உள்ளிட்ட முக்கியத் தேர்தல் செயல்முறைகளுக்கு அந்த அதிகாரிதான் பொறுப்பு. எனவே அவர் எவ்விதக் களங்கத்திற்கும் இடமின்றி முழுமையாக நடுநிலைமையுடன் இருக்க வேண்டும். அரசியலமைப்பின் 324-வது பிரிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகள் அடிப்படையில் எவ்விதச் சார்புத்தன்மையும் இல்லாத அதிகாரிகளை நியமிப்பதன் மூலம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. எனவே தேர்தல் செயல்முறையின் நேர்மையை உறுதி செய்ய உடனடி, நியாயமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுத்து பவானிப்பூர் தேர்தல் அதிகாரியை நீக்க வேண்டும்’ என்று மனுவில் திரிணாமுல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: