மால்டா: மேற்குவங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை தப்ப விட்டுவிட்டு, உள்ளூர் மக்களை அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள் என்று முதல்வர் மம்தா குற்றம் சாட்டினார். மேற்குவங்கத்தில் மால்டா மாவட்டத்தில் மோதாபாரி பகுதியில் எஸ்ஐஆர் திருத்தப்பணிக்கு பிறகு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த வாக்காளர்கள் பெயர், விவரங்களை உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 7 நீதிபதிகள் சரிபார்த்த போது, அவர்கள் 9 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களை அதிரடிப்படை வந்து மீட்டது.
இந்த பிரச்னை தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா கூறியதாவது: மால்டா மாவட்டத்தின் மோதாபாரி பகுதியில் நடைபெற்ற வன்முறை மற்றும் நீதிபதிகளை முற்றுகையிட்ட சம்பவத்திற்குப் பின்னால் இருந்த உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர். இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமையின் பெயரால், விசாரணை அதிகாரிகள் அப்பாவியான உள்ளூர் மக்களைத் துன்புறுத்தி வருகிறார்கள். எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பிறகு, நீதிமன்ற பரிசீலனையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்யும் நீதிபதிகளை உள்ளூர் மக்கள் இனிமேல் நேரடியாக அணுக வேண்டாம். அதற்கு மாறாக, வாக்காளர் பட்டியலிலிருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்கக் கோரி, தீர்ப்பாயங்களிடம் விண்ணப்பங்களை மக்கள் வழங்க வேண்டும்.
இரண்டு வகுப்புவாதக் கட்சிகள் நீதிபதிகளை முற்றுகையிட்டுவிட்டுத் தப்பிவிட்டன. இப்போது, விசாரணை அதிகாரிகள் அப்பாவியான உள்ளூர் மக்களைத் துன்புறுத்தி வருகின்றனர். விசாரணையின் பெயரில் சுமார் 50 அப்பாவிகளை அவர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இங்கேயே மால்டாவில் ஒரு கூட்டத்தை நடத்தி, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகப் பேசுமாறு அமித் ஷாவிற்கு நான் சவால் விடுகிறேன். மக்களுக்கு இத்தகைய துயரத்தை ஏற்படுத்தியதற்காக, பாஜவினர் மக்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கோர வேண்டும். வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்குப் பழிதீர்க்க, மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாயிலாகத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.
