சென்னை: ஒன்றிய அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கான அறிவிப்புகளில் ஏமாற்றம் என தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு விமர்சனம். சென்னை, பாரிமுனையில் உள்ள தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (SICCI) அலுவலகத்தில் 2026-27 ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் குறித்து பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
அப்போது பேசிய, எஸ்ஐசிசிஐ அமைப்பின் மருத்துவக் குழு நிபுணர் மருத்துவர் பாலாஜி கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக பட்ஜெட் மருத்துவத்துறைக்கு குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்தாண்டு சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள்; சில எதிர்பார்ப்புகள் உள்ளது. சில ஏமாற்றங்கள் உள்ளது. மருந்து தரமானதாக உள்ளது என சோதனை செய்ய போதை மருந்து கட்டுப்பாடு மையங்கள் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது தேவையான ஒன்று.
சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி தளர்வு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதேநேரத்தில், இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் பயனடையும் சுகாதார நலன் திட்டம் மற்றும் ஊரக சுகாதார நலனுக்குச் செயல்படுத்த வேண்டிய நிதி குறித்து பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் வகையில் மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனை அறை உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டியைக் குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
அதேபோல், முதியவர்களுகான தனியார் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் சலுகைகள் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார் எஸ்ஐசிசிஐ அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீராம் கூறியதாவது: உள்கட்டமைப்புக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இந்தியாவில் வரி வருவாய் அதிகரிக்கவில்லை; இருப்பினும் அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் வளர்ச்சி இருந்தாலும் வரி வருவாய் அதிக அளவில் இல்லை. இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு அறிவிப்பு உள்ளது.
இந்த பட்ஜெட் வளர்ச்சி என்பது முக்கிய நோக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பில் வரி தளர்வுகள் அதிகளவில் இல்லை. எஸ்ஐசிசிஐ அமைப்பின் சிறு குறு தொழில் நிபுணர் மதுரா கணேசன் கூறியதாவது: சிறுகுறு தொழில்களுக்காக மூன்று புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். பங்கு வழங்குதல், சுயநிதி வழங்குதல், யார் உதவியும் இல்லாமல் பயன் பெறுவதற்கான ஒரு அறிவிப்பினை அறிவித்துள்ளார்கள். பங்கு ஆதரவு தரும் வகையில் ஏழு லட்சம் கோடி ரூபாய் முதலீடு சிறு குறு தொழிலில் செய்ய உள்ளார்கள் என்றார்.
