முதன்முதலில் பாஜ வென்ற தொகுதிக்கு ‘கிராக்கி’; மோதலுக்கு தயாராகும் முன்னாள் இன்னாள்: பழித்தீர்ப்பாரா? தூக்கி விடுவாரா? முடிவு மாஜி ஐபிஎஸ் கையில்…

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தொகுதியாகும். 1996ல் பாஜ வேட்பாளர் சி. வேலாயுதம் 27,443 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதுவே தமிழகத்தில் பாஜ பெற்ற முதல் சட்டமன்ற வெற்றியாகும். 2001 திமுக கூட்டணியில் பாஜ வேட்பாளர் சி.வேலாயுதம் 33,449 வாக்குகள் (40%) பெற்று நூலிழையில் (2,774 வாக்குகள் வித்தியாசம்) வெற்றியைத் தவறவிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

2016 பாஜ தனித்துப் போட்டியிட்டது. வேட்பாளர் ஷீபா பிரசாத் 31,994 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 2021 தேர்தலில் பாஜ அதிமுக கூட்டணியில் இருந்தது. இந்தத் தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதால், பாஜ நேரடியாகப் போட்டியிடவில்லை. இந்தத் தொகுதி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில், இத்தொகுதியில் பாஜ வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 33.9% வாக்குகளைப் பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளார்.

தொடர்ச்சியாக 30,000க்கும் அதிகமான வாக்குகளைத் தக்கவைத்து வருவதன் மூலம், இத்தொகுதியில் பாஜ ஒரு முக்கியமான சக்தியாக இன்றும் விளங்கி வருகிறது. 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பத்மநாபபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மனோ தங்கராஜ் அமோக வெற்றி பெற்றார். தற்போது, 2026 தேர்தலுக்காக தமிழக பாஜவில் மூத்த தலைவர்களுக்குத் தொகுதி வாரியாகப் பொறுப்புகளை வழங்கி வருகிறது.

முதல்கட்டமாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மேட்டுப்பாளையம், பழனி, தென்காசி மற்றும் பரமக்குடி ஆகிய தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் தொகுதிக்கான பாஜ தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பு முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்கப்பட்டுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் பத்மநாபபுரம் அல்லது நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டாலும், நாகர்கோவில் தொகுதியில் தற்போதைய பாஜ எம்.எல்.ஏ எம்.ஆர். காந்திக்கும் அவருக்கும் இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை எப்போதெல்லாம் சந்திக்கிறாரோ அப்போதெல்லாம் பிரதானமாக அமைச்சர் மனோதங்கராஜ் மீது குற்றச்சாட்டு வைப்பதாகத்தான் இருக்கும். திமுக, தமிழக அரசை விட்டுவிட்டு நேரடியாக அமைச்சர் மனோதங்கராஜை தாக்குவது வழக்கம். பதிலுக்கு அமைச்சர் மனோதங்கராஜூம் நேருக்குநேர் விவாதத்திற்கு அழைப்பது உண்டு.

இந்தசூழலில் பத்மநாபபுரத்தில் நேருக்கு நேர் தேர்தல் களம் காண பொன்.ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே அண்ணாமலையை இங்கு தேர்தல் பொறுப்பாளராகநியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல்களை விட மக்களவைத் தேர்தல்களில்தான் பாஜ இத்தொகுதியில் அதிக வாக்குகளைப் பெறுகிறது. இருப்பினும், சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவின் கூட்டணி பலம் மற்றும் உள்ளூர் வேட்பாளர் செல்வாக்கு காரணமாக பாஜ வெற்றி பெறுவதில் சில சவால்கள் நீடிக்கின்றன.

அதே நேரத்தில் அண்ணாமலை தலைவராக இருந்தபோது சீனியர்களை ஓரங்கட்டியதால் அவர் மீது புகார் அளித்த லிஸ்ட்டில் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒருவர். இதனால், வரும் தேர்தலில் பொறுப்பாளராக இருக்கும் அண்ணாமலை அவரை பழித்தீர்க்க குழி தோண்டுவாரா அல்லது தூக்கி விடுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Related Stories: