சென்னை: தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு-கேரளா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு-கேரளா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் ம லைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்தது. அத்துடன் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும். 3ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானில காணப்படும்.
4ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால்பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதேநிலை 5ம் தேதி வரை நீடிக்கும்.
மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் இன்று முதல் 5ம் தேதி வரையில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதேபோல, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
