தூத்துக்குடி: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக, தென்மாவட்டங்களில் அதிக இடங்களை கேட்டு அடம் பிடிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து டி.டி.வி.யுடன் சென்று எம்எல்ஏ., பதவியை இழந்த ஓட்டப்பிடாரம் சுந்தர்ராஜ், விளாத்திகுளம் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு சீட் வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் பிடிவாதமாக உள்ளார். இதனால் ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த தொகுதியில் சீட் கிடைக்கும் என்ற கனவில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ மோகன், அமைப்புச் செயலாளர் சின்னதுரை, வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யனடைப்பு ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோவில்பட்டி கவியரசன், வழக்கறிஞர் முனியசாமி உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது போட்டியில் இருந்து ஒதுங்கி காணப்படுகிறார்.
எனவே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தனது ஆதரவாளரான கோவில்பட்டியை சேர்ந்த மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சத்யாவை களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மகேஷ் மனைவி சிவகாமசுந்தரி, தனஞ்செயன், தனவதி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகி சரவணபெருமாள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பெருமாள்சாமி போன்றவர்களும் தலைமையிடம் சீட் கேட்டு போராடி வருகின்றனர்.
ஆனால் இந்த தொகுதியில் அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ உமாமகேஸ்வரியை வேட்பாளராக நிறுத்துவதற்கு டிடிவி.தினகரன் கடும் முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக பாஜ மூலம் அதிமுகவிற்கு டிடிவி.தினகரன் அழுத்தம் கொடுத்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வந்தார் டி.டி.வி.தினகரன், அதேபோன்று எந்தக் காலத்திலும் டிடிவி.தினகரனை அதிமுக கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று கூறிவந்த எடப்பாடி பழனிசாமியும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளதை அதிமுக, அமமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, அமமுக வேட்பாளருக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்களா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இதேபோன்று திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியையும் பாஜ குறிவைத்து செயல்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுவது உறுதி என்பதால் அக்கட்சியினர் தேர்தல் பணியை துவக்கி விட்டனர்.
ஆனால் பாஜ தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், இந்த தொகுதிக்கு குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் யாருக்கு எந்த தொகுதி என்பது தெரியாமல் அதிமுக கூட்டணியினர் திக்குத் தெரியாமல் திணறி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அமமுக மற்றும் பாஜவினர் நான்கு தொகுதிகளை கேட்பதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
