கோபி: கோபி அருகே வடுகபாளையத்தில் நேற்று கோபி மேற்கு ஒன்றிய தவெக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணிக்கு யார், யார் வரவேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார். அதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஜய், எந்த தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று முடிவு செய்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
நான் அதிமுகவில் இருக்கும்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் எந்த இடத்தில் இருந்தது. நான் குரல் கொடுத்த பிறகு எந்த இடத்தில் இடம்பெற்று உள்ளது என்பதை அறிவீர்கள். என்டிஏ கூட்டணியில் பின்னால் வைக்கப்பட்டு இருக்கும் பேனரில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லை. பிரதமர் படம் ஒருபுறமும், எடப்பாடி படம் ஒருபுறமும் தான் இருந்ததே தவிர, வேறு எதுவும் இல்லை.
அப்படி என்றால் கட்சியை எங்கே எடுத்து செல்கிறார்கள், எந்த முகத்தை வைத்து மக்களிடம் வாக்கு கேட்க போகிறார்கள்? மாவட்ட செயலாளரை கூட நியமிக்க முடியாமல் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒருவரை அழைத்து வந்து தான் மாவட்ட செயலாளராக பணியாற்ற வேண்டிய நிலை அதிமுகவில் உள்ளது. தவெகவில் விருப்ப மனுக்கள் பெறுவது குறித்து நாளை (இன்று) தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
* ‘விஜய்க்கு எப்போ தோணுதோ அப்போ பிரஸ் மீட் வைப்பாரு…’
காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து தவெக பேசி வருவதாக தகவல்கள் வெளிவருகிறதே என்ற கேள்விக்கு, ‘‘அவர்கள் எந்தக் கட்சியுடன் பேசிக் கொண்டுள்ளார்கள் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்’’ என செங்கோட்டையன் தெரிவித்தார். விஜய் எப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்ற கேள்விக்கு, ‘‘வேண்டும் என்கிறபோது விஜய் நாட்டிற்காக குரல் கொடுக்கிறாரோ, திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அன்று குரல் கொடுப்பார்’’ என்றார்.
