கோரகுந்தாவில் மைனஸ் 3 டிகிரி வெப்பநிலை: கொட்டி தீர்த்த உறைபனி

மஞ்சூர் : மஞ்சூர் அருகே கோரகுந்தா பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவில் உறை பனி கொட்டியது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனியின் தாக்கம் காணப்படும்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறை பனி கொட்டுவது வழக்கம். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பிற்பகுதியில் நீர் பனி விழ துவங்கியது. இடை, இடையே பரவலாக மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக உறை பனி நிலவி வருகிறது.

குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி, கோரகுந்தா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக உறை பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது. கோரகுந்தா பகுதியில் புல்வெளிகள் அதிகம் உள்ள நிலையில் நேற்று காலை உறை பனி கொட்டியதில் புல்வெளிகளில் உப்பு கொட்டி வைத்தது போல் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.

பொதுவாகவே கோரகுந்தாவில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் இந்தாண்டு முன் எப்போதும் இல்லாத அளவில் உறை பனியின் தாக்கம் உள்ளதாக கூறுகின்றனர்.

காலை நேரங்களில் மைனஸ் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகிறது. மஞ்சூர், குந்தா பகுதிகளிலும் மாலை 3 மணிக்கெல்லாம் பனி விழ துவங்கி மறுநாள் காலை 9 மணி வரை நீடிக்கிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்பட பலருக்கும் முகம், உதடுகள், கை, கால்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகளாலும் பலர் அவதிகுள்ளாகி வருகின்றனர். மாலை நேரங்களில் பனி விழத்துவங்கிய மறுநிமிடமே குளிர் வாட்டுவதால் ஸ்வெட்டர், ஜர்கீன், மப்ளார், கையுறைகள் போன்ற உடலுக்கு சூடு தரும் வெம்மையாடைகளை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

கடும் குளிரால் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் உறைபனி கொட்டி வருகிறது. நேற்றும் ஊட்டி உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உறைபனி பொழிவு அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக, நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உறைபனி விழுந்தது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா,காந்தல்,தலைக்குந்தா,எச்பிஎப்,பைக்காரா,ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி மற்றும் கிளன்மார்க்கென் போன்ற பகுதிகளில் நேற்றும் உறைபனி அதிகமாக விழுந்தது. புல்வெளிகள், வாகனங்களில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

பனியின் காரணமாக வெப்பநிலை மிகவும் குறைந்தது.நேற்று  ஊட்டியில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியசாக ஊட்டியில் பதிவாகியிருந்தது.

இதனால், காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. தேயிலைத் தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் பலரும் குளிரை சமாளிக்க ஆங்காங்கே தீ மூட்டி காய்ந்தனர். சுற்றுலா பயணிகள் காலை நேரங்களில் தலைக்குந்தா, தாவரவியல் பூங்கா உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பனிப்பொழிவை கண்டு ரசித்தனர்.

Related Stories: