தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கையும், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: