அருமனை: குமரி மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணி உள்ளிட்டவற்றின்போது வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு சென்று விளை நிலத்தில் கொட்டுகின்றனர். ஆனால் சில விளை நிலங்களுக்குள் வாகனம் உள்ளே நுழைய முடியாதபட்சத்தில் சாலையோரம் கொட்டிவிடுகின்றனர். இதனால் அந்த மண் சில நாட்களில் சாலையின் நடுவே சிதறி விடுகிறது. மேலும் மண்ணை ஏற்றி செல்லும் வாகனங்களில் இருந்தும் மண் சிதறி சாலையில் கிடக்கின்றன.
குறிப்பாக மஞ்சாலுமூடு பகுதியில் இருந்து அருமனை செல்லும் சாலையில் ஏலாக்கரை பகுதியில் அதிகளவில் கொட்டிக்கிடக்கிறது. இதனால் இந்த சாலையில் பைக்கில் செல்பவர்கள் வழுக்கி விழுந்துவிடுகின்றனர். சாலையோரம் நடந்து செல்பவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு சாலையில் சிதறிக்கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சாலையில் சிதறி கிடக்கும் வண்டல் மண்ணால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.