ஐபிஎல் போட்டியின் 69வது லீக் ஆட்டம் இன்று இரவு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் மும்பை 17, பஞ்சாப் 15 ஆட்டங்களில் வென்றுள்ளன. இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக பஞ்சாப் 230, மும்பை 223 ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 119, மும்பை 87 ரன்களில் இன்னிங்சை முடித்துள்ளன. இவ்விரண்டு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இதுவரை விளையாடிய 13 லீக் ஆட்டங்களில் 8-5 என்ற கணக்கில் வெற்றி-தோல்விகளை பெற்று, 16 புள்ளிகளுடன் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் 13 ஆட்டங்களில் ஆடி 8-4 என்ற கணக்கில் வெற்றி – தோல்விகளை பெற்று, 17 புள்ளிகளுடன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறி விட்ட இந்த இரு அணிகளுக்கும், இது 14வது மற்றும் கடைசி லீக் ஆட்டமாகும். இப்போட்டியில் மும்பை வென்றால் 18 புள்ளிகளுடனும், பஞ்சாப் வென்றால் 19 புள்ளிகளுடனும் முதலிடம் பிடிக்கும்.
The post 69வது லீக் போட்டியில் இன்று முதல் இடம் யாருக்கு? மும்பை-பஞ்சாப் மோதல்; appeared first on Dinakaran.