தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 3,390 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள்: 8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: சிப்காட் மேலாண்மை இயக்குநர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 50 தொழிற்பூங்காக்கள் உருவாக்கி, 3,390 தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 8.79 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக சிப்காட் மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார். பெரும்புதூர் புத்தாக்க மையத்தில் நேற்று சிப்காட் நிறுவனம் அதன் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து திறன் மேம்பாட்டிற்கான ஆற்றலை கண்டறியும் கூட்டம் சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது: சிப்காட் நிறுவனம் இதுவரை 24 மாவட்டங்களில் 50 தொழிற் பூங்காக்களை 48,926.48 ஏக்கரில் உருவாக்கி 3,390 தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 8.79 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. உயர்கல்விக்கும், தொழில் நிறுவனங்களில் திறன்மிகு வேலைகளின் ஆற்றலுக்குமான இடைவெளியை குறிப்பாக நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் பயின்றுவரும் மாணவர்களிடத்தில் சீர்செய்வதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் பயிலும்போதே கண்டறியப்பட்டு தொழில் நிறுவனங்களின் உதவியுடன் குறிப்பிட்ட தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்கள் முதலாம் ஆண்டு இறுதியில் விருப்பமான பிரிவினை தேர்ந்தெடுத்து அதில் நிலையான மதிப்பீட்டினை பெறலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் மாணவர்கள் இணைப்பு பயிற்சி திறன் ஆற்றல் மற்றும் பணியிடு திறன் குழுமத்தில் பங்குபெறும் வாய்ப்பினை பெறுவர். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிப்காட் பொது மேலாளர் சந்திரமோகன், கண்காணிப்பு பொறியாளர் தேவஇரக்கம், சிப்காட் அலுவலக தொழிற்நுட்ப பணியாளர்கள் மற்றும் பெரும்புதூர் புத்தாக்க மையத்தின் போர்ட் நிறுவனத்தை சார்ந்த அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

 

The post தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 3,390 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள்: 8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: சிப்காட் மேலாண்மை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: