தாம்பரம், மே 23: தாம்பரம் அடுத்த முடிச்சூர், லிங்கம் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாலாஜி (42). இவரது மனைவி மகேஸ்வரி (40). இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். பாலாஜி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை, இவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மகேஸ்வரி, டியூஷன் சென்ற தனது மகளை அழைத்து வர, வீட்டை பூட்டிவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 40 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து நேற்று மாலை பாலாஜி பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன், ரூ.1.5 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.