பைக்கில் சென்றபோது இடித்து கீழே தள்ளி மெடிக்கல்ஷாப் ஊழியரிடம் ரூ.2 லட்சம் பறிக்க முயற்சி

 

திருவொற்றியூர், மே 27: பைக்கில் சென்றபோது இடித்து கீழே தள்ளி, மெடிக்கல் ஷாப் ஊழியரிடம் ரூ.2 லட்சம் பறிக்க முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மணலி, தென்றல் நகரை சேர்ந்தவர் அஜ்மல்கான் (30), மண்ணடியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி இரவு மெடிக்கல் ஷாப்பில் இருந்து ரூ.2 லட்சத்தை பைக்கில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.
மணலி தென்றல் நகர் அருகே சென்றபோது, பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், அஜ்மல்கானின் பைக் மீது மோதி கீழே தள்ளினர்.
அவர் எழுவதற்கு முன்பாக பைக்கில் இருந்த பணத்தை எடுக்க முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஜ்மல்கான் திருடன், திருடன் என அலறிக் கூச்சலிட்டார்.
அப்போது, பொதுமக்கள் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, பொதுமக்கள் படுகாயமடைந்த அஜ்மல்கானை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஜ்மல்கான் அளித்த புகாரின்பேரில் மணலி போலீசார் வழக்கு பதிந்து பணம் பறிப்பில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பைக்கில் சென்றபோது இடித்து கீழே தள்ளி மெடிக்கல்ஷாப் ஊழியரிடம் ரூ.2 லட்சம் பறிக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: