தொழிலதிபர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: தண்டையார்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை, மே 28: தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன், தொழிலதிபரான இவர் ஐஸ் பேக்டரி மற்றும் குளிர்பானம் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு மொத்த வியாபார தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று சந்திரசேகர் வீட்டில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது சந்திரசேகரனின் மகன் பிரகல நரசிம்மன் (32), தனது தாயின் துப்பாக்கியை எடுத்து நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காசிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகல நரசிம்மன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விசாரணையில் கடந்த சில நாட்களாகவே மன உளச்சலில் இருந்து வந்ததாகவும் இவருடைய தாய் தந்தை இருவரும் துப்பாக்கி முறையாக லைசன்ஸ் பெற்று வைத்திருப்பதால் அதனை எடுத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு மண்டல இணை ஆணையர் மனோகரன் விசாரணை நடத்தினார். பிரகல நரசிம்மன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலதிபர் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: தண்டையார்பேட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: