சென்னை: தென்மேற்கு பருவமழை இம்மாதம் 25ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமானங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக் தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள், கட்டுப்பாட்டு அதிகாரிகள், தரைதளம் பராமரிப்பு பிரிவு அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், அவசரகால மீட்பு படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை விமான நிலையம் பகுதி முழுவதும், மழைநீர் வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்தப்படுவதோடு, மழைநீர் தேங்காமல், நேரடியாக, வடிகால்கள் மூலம் வெளியேறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதோடு ‘ஏர்பிரான்’ எனப்படும் விமானங்கள் நிறுத்தும் பகுதி, விமான ரன்வேக்கள் சுற்றிலும் மழைநீர் தேங்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து நிறைவேற்றுவது, அதைப்போல் சூறைக்காற்று, இடி மின்னல் போன்ற மோசமான வானிலையின் போது, விமானங்கள் இயக்கங்களை பாதுகாப்பான முறையில் நடத்துவதும்,
குறிப்பாக சிறிய ஏடிஆர் ரக விமானங்கள், மோசமான வானிலை நேரங்களில் வானில் பறப்பதை கவனமாக கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்வது, மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் ரத்து இருக்குமானால், பயணிகளுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தி பயணிகளின் சிரமங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
The post தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை; சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்: இயக்குநர் சி.வி.தீபக் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.