பீக்ஹவரில் தொந்தரவு செய்யக் கூடாது; போதையில் வாகனம் ஓட்டுவது உட்பட 5 விதிமீறல்களுக்கு கட்டாயம் அபராதம்: போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை: சென்னையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அண்ணாநகர் ரவுண்டனா, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை, ஓஎம்ஆர் சாலை என 60 முக்கிய சந்திப்புகளில் சாலை விதிகளை மீறும் வாகனம் ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கும் வகையில் 77 ஏஎன்பிஆர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு இ-சலான் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. 12 காவல் மாவட்டங்களில் இ-சலான் தகவல்களை பெறுவதற்கு 12 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இதுவரை ரூ.24.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ெசய்து வருகின்றனர்.

25 போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் அதுவும் பீக்ஹவர் என்று கூறப்படும் அலுவலகம், பள்ளி செல்லும் நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை என்ற பேரில் பல்வேறு இடங்களில் சாலையின் இடையே சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பீக்ஹவரில் இதுபோன்ற சோதனைகளை நடத்துவது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் அருண் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக போக்குவரத்து போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது 5 விதிமுறைகளை கட்டாயம் போக்குவரத்து போலீசார் கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக அதிவேகமாக வாகன ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், பைக்கில் இருவருக்கு மேல் பயணித்தல் என 5 முக்கிய கட்டுப்பாடுகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். மற்ற விதிமீறல்களான காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டுவது, சிக்னல் தாண்டுதல் உள்ளிட்ட சாலை விதிமீறல்களுக்கு, சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள ‘ஏஎன்பிஆர்’ கேமரா மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும்.

வாகன சோதனை என்ற பெயரில் கூட்டமாக சாலைகளின் இடையே போக்குவரத்து போலீசார் நிற்க கூடாது மற்றும் நெரிசல் நேரங்களில் போக்குவரத்து போலீசார் சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அருண் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பீக்ஹவரில் தொந்தரவு செய்யக் கூடாது; போதையில் வாகனம் ஓட்டுவது உட்பட 5 விதிமீறல்களுக்கு கட்டாயம் அபராதம்: போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: