தஞ்சை அருகே கோர விபத்து அரசு பஸ் – வேன் மோதல் பெண்கள் உட்பட 5 பேர் பலி: கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வந்த போது சோகம்

வல்லம்: தஞ்சாவூர் அருகே அரசு பஸ்- வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி மேம்பாலத்தின் மேலே தார் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் மேம்பாலத்தில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் தற்போது ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

செங்கிப்பட்டி மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதையில் செல்லும் பொழுது எதிரே கர்நாடகாவில் இருந்து தஞ்சை நோக்கி வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்து மற்றும் வேனில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு, பேருந்து மற்றும் வேனில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்து மற்றும் வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் கர்நாடகா சுற்றுலா பேருந்தில் வந்த 11 பேரில் பெண் உட்பட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வேனில் வந்த ஒருவர் இறந்தார். மேலும் வேனில் வந்த 6 பேர், பஸ்சில் வந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

The post தஞ்சை அருகே கோர விபத்து அரசு பஸ் – வேன் மோதல் பெண்கள் உட்பட 5 பேர் பலி: கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வந்த போது சோகம் appeared first on Dinakaran.

Related Stories: