டாஸ்மாக் தொடர்பான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8 வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதி பெறாமல் நடத்திய இந்த சோதனை செல்லாது என அறிவிக்க கோரி தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘‘அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ’’எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில், ‘‘டாஸ்மாக் நிர்வாகம் என்பது அரசு சார்ந்தது ஆகும்.

அதில் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்த வேண்டும் என்றால் அரசின் முன்கூட்டியே காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதனை விடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பது சட்டவிரோதம் ஆகும். எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்வது மட்டுமில்லாமல், அமலாக்கத்துறை சோதனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு முறையீடு வைக்கப்பட்டது அதில், ‘‘டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த பதிவாளர், டாச்மாக் தொடர்பாக வழக்கு 22ம் தேதி அதாவது நாளை விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

The post டாஸ்மாக் தொடர்பான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: