சிபிஐ தலைவரை தொடர்ந்து உளவுத்துறை தலைவருக்கு 2வது முறை பதவி நீட்டிப்பு: ஆயுஷ் செயலாளருக்கு 4வது முறை

புதுடெல்லி: சிபிஐ தலைவராக இருந்த பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே 26ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அதே போல் உளவுத்துறை தலைவர் தபன் குமார் தேகாவுக்கு அடுத்த ஆண்டு ஜூன் வரை கூடுதலாக ஒரு வருட பதவிநீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அவருக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு ஆகும். பஹல்காம் தாக்குதலில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நேரத்தில் இந்த பதவி நீட்டிப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இமாச்சல் மாநில ஐபிஎஸ் அதிகாரியாக 1988ஆம் ஆண்டு தேர்வான தபன்குமார் தேகா 2022 ஜூன் மாதம் உளவுத்துறை தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது பதவிக்காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒருவருடம் பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்ததாக பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆயுஷ் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடேச்சாவுக்கு நான்காவது பதவி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சக்ரபாணி ஆயுர்வேத மருத்துவமனையில் தலைமை ஆலோசகராக இருந்த ராஜேஷ் கோடேச்சா 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆயுஷ் அமைச்சகத்தில் சிறப்பு செயலாளராக நேரடியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு 2020 ஆம் ஆண்டிலும் பின்னர் 2022 ஆம் ஆண்டிலும், கடந்த ஆண்டு ஜூன் மாதமும் என மூன்று முறை மேலும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக 2026ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

The post சிபிஐ தலைவரை தொடர்ந்து உளவுத்துறை தலைவருக்கு 2வது முறை பதவி நீட்டிப்பு: ஆயுஷ் செயலாளருக்கு 4வது முறை appeared first on Dinakaran.

Related Stories: