தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சுப் பணியில் தேர்வு செய்யப்பட்ட சார்நிலை பணியில் செயல் அலுவலர் (நிலை-4), பணியிடத்திற்கு 29 நபர்களுக்கும், தொகுதி-4 நிலையிலான இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 44 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு 24 நபர்களுக்கும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடத்திற்கு 12 நபர்களுக்கும், என மொத்தம் 109 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 16 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களை முறையாக பராமரித்தல், சொத்துகளை பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் செயல் அலுவலர் பணியிடங்களும், துறையின் அமைச்சுப்பணியில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் செயல் அலுவலர் (நிலை-1, நிலை-3 மற்றும் நிலை-4) பணியிடங்களுக்கு 162 நபர்களுக்கும், உதவியாளர் பணியிடத்திற்கு 184 நபர்களுக்கும், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 80 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு 101 நபர்களுக்கும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-3) பணியிடத்திற்கு 31 நபர்களுக்கும், என மொத்தம் 558 நபர்களுக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் (நிலை -4), தொகுதி-4 நிலையிலான இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 109 நபர்களுக்கு முதலமைச்சர் இன்றையதினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதலமைச்சரால் இன்று வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகளையும் சேர்த்து கடந்த நான்காண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 667 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 109 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.