தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை; 5,700 ஏக்கர் எள், உளுந்து நெற் பயிர் நீரில் மூழ்கி சேதம்: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை, செட்டிபத்து உள்ளிட்ட கிராமங்களில் கோடை பயிராக நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் உளுந்து மற்றும் எள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து மற்றும் எள் பயிர்களில் மழை நீர் தேங்கியுள்ளது. வாய்க்கால்களிலும் மழைநீர் செல்வதால் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் முற்றிலுமாக அழுகி வீணாகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதேபோல் திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் 5,000 ஏக்கரில் எள் சாகுபடி செய்திருந்தனர்.

10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த எள், பயிறு வகைகள் கனமழையால் நீரில் மூழ்கியது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, எள்ளில் வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு குறுவை சாகுபடி தொடங்க எண்ணியிருந்தோம். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், தியாகராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. அதேபோல் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் நவரை பருவத்தில் சுமார் 100 ஏக்கரில் நடவு செய்த நெற்பயிர்களை அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் முற்றிலும் சாய்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர்- அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சவுந்தரசோழபுரத்தில் இருந்து வெள்ளாற்றின் அக்கரையில் உள்ள அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு வரை இணைப்பு சாலையாக தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. கன மழை காரணமாக வயல்வெளி பகுதியில் உள்ள மழைநீர் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்காக வந்தது. இதில் தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உப்பு உற்பத்தி பாதிப்பு: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் சுமார் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை வரை மழை நீடித்தது. இதன் காரணமாக சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியில் குறுவை நெல் இயந்திர நடவு மூலம் பயிர் செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் இப்பகுதியில் மழை பெய்தது. இதில் சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தமிழக மற்றும் கர்நாடக தென்பெண்ணை ஆற்று பகுதிகளில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஓசூரில் 48 மிமீ மழையும், கெலவரப்பள்ளி 90 மிமீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை நீர் வரத்து 904 கனஅடியானது. அணையின் மொத்த கொள்ளவான 44.28 அடியில், தற்போது 41.98 அடி நீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 794.43 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை; 5,700 ஏக்கர் எள், உளுந்து நெற் பயிர் நீரில் மூழ்கி சேதம்: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: