சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2ம் கட்ட திட்டத்தின் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தில் முற்கட்டமாக பூந்தமல்லி – போரூர் வரையிலும், அதனை தொடர்ந்து போரூர் – வடபழனி – கோடம்பாக்கம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அடுத்தாண்டு இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் முதற்கட்டம் மற்றும் 2ம் கட்ட திட்டத்தின் முக்கிய இணைப்பு நிலையமாக உள்ளது. மேலும் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் சென்ட்ரல் மற்றும் வடசென்னை பகுதிகளுக்கு செல்ல வடபழனி மெட்ரோ நிலையத்திலிருந்து எளிதாக மாறி பயணிக்க முடியும். இவ்வாறாக மாறுவதற்கு ஒரு வழித்தடத்திலிருந்து சாலை மார்க்கமாக பயணித்து மீண்டும் அடுத்த வழித்தடத்தை அடைய பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகப்படுவர். எனவே இரண்டு வழித்தடங்களையும் எளிதாக இணைக்க ஆகாய நடைபாதை கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வடபழனி நிலையத்துடன் 4வது வழித்தட மெட்ரோ ரயில் நிலையம் இணைப்பு ரூ.10 கோடியில் ஆகாய நடைபாதை அமைக்க திட்டம்: 130 மீட்டர் தூரம், 6 மீட்டர் அகலத்தில் தயாராகிறது; மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.