சேலம், மே 20: சேலம் அம்மாபேட்டை பண இரட்டிப்பு மோசடி வழக்கு விவகாரத்தில் கைதான தம்பதி ஜாமீன்கேட்டு கோவை டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். சேலத்தில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை தொடங்கியவர் விஜயபானு. இவர் அம்மாபேட்டையில் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விஜயபானு, அவரது நெருங்கிய தோழி ஜெயபிரதா, பாஸ்கர், சையது மஹ்மூத் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.12.68 கோடி பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளை மீது இதுவரை 217 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த அறக்கட்டளையில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்திருந்தாலும் பெரும்பாலானோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. இவ் வழக்கில் கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்த முக்கிய நிர்வாகியான செந்தில்குமார், அவரது மனைவி கரோலின் ஜான்சி ராணி ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரசேகரன் ஓரிரு நாட்களில் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளார். கணவன் மனைவியான இவர்கள் மீது, போலியாக ரசீது அச்சடித்து பணம் வசூல் செய்ததாக விஜயபானு தரப்பினர் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.
இவ்வாறு கூறி, பணம் கட்டியவர்களை இருதரப்பினரும் ஏமாற்ற திட்டமிடுவதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என விஜயபானு கூறிவரும் நிலையில் எவ்வாறு பணம் கட்டமுடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்நிலையில் பணம் செலுத்தியுள்ள பொதுமக்கள், கட்டிய பணம் எப்போது கிடைக்கும் என்ற ஆவலில் உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுத்துவிடுவேன் என விஜயபானு கூறிவருகிறார். ஆனால் அதனை அவர் நீதிமன்றத்தில் ஆவணமாக தெரிவிக்க வேண்டும். அப்போது தான் நாங்கள் நம்புவோம். அவ்வாறு அவர் தெரிவிக்கும்பட்சத்தில், புகார் கொடுத்தவர்களுக்கு தான் பணத்தை திரும்ப வழங்குவார். இதில் புகார் கொடுக்காதவர்களுக்கு கொடுக்க வாய்ப்பு இல்லை. அனைவருக்கும் பணத்தை திரும்ப கொடுத்தால் தான் தண்டனையில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியும். அதே நேரத்தில் கைதான 6 பேருக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கிறது? பினாமி பெயரில் சொத்து சேர்க்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றனர்.
The post கைதான தம்பதி ஜாமீன் கேட்டு டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் appeared first on Dinakaran.