இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் இன்றும், நாளையும் வெப்பம் குறைந்து காணப்படும்.

22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்
மத்திய கிழக்கு அரபிக் கடலில் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். கர்நாடகா கடல் பகுதிக்கு அப்பால் 21ம் தேதி வாக்கில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகக் கூடும். தெற்கு அரபிக் கடல், மாலத்தீவு, குமரிக் கடல் பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது. இன்று காலை 8.30 மணிவரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கோடை மழை 90% கூடுதலாக பெய்துள்ளது
தமிழ்நாட்டில் கோடைமழை 90% கூடுதலாக பெய்துள்ளதது. மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் சராசரியாக 10 செ.மீ. மழை பெய்யும், தற்போது 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோடை மழை இன்றுவரை 192.27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மே 28க்கு பிறகு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை
மே மாதம் 28ம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சூறாவளிக் காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடலில் சூறாவளிக் காற்று 50 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: