திருவொற்றியூர்: மணலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பொம்மி (60). இவருக்கு திருமணமாகாததால் உறவினருடன் வசித்து வருகிறார். உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டதால் பொம்மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டை சுத்தம் செய்யும் மாப் ஸ்டிக் ஈரமாக இருந்ததால், அதை மொட்டை மாடியில் காய வைத்துள்ளார்.
பின்னர் அதை எடுக்க எடுக்க சென்றபோது, 2 வீடுகளுக்கு இடையே உள்ள சுமார் அரை அடி சந்தில் தவிறி விழுந்துள்ளது. பொம்மி அதை எடுக்க பல வழிகளில் முயன்றும் முடியாததால், சந்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் மாப் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு அவரால் வெளியே வர முடியாமல் சந்துக்குள் சிக்கி தவித்துள்ளார். பயத்தில் அவர் கூச்சல் போட்டதால் பக்கத்து வீட்டினர் வந்து அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த மணலி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி பொம்மியை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். அவரை மீட்கும்போது முகம், முதுகு ஆகிய இடங்களில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post தவறி விழுந்த மாப் ஸ்டிக்கை எடுக்க முயன்றபோது 2 வீடுகளுக்கு இடையே உள்ள சுவரில் சிக்கி தவித்த மூதாட்டி: 3 மணி நேரம் போராடி மீட்பு appeared first on Dinakaran.