தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மண்டல ரயில் போக்குவரத்து சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி, விரிவான நகரமயமாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தலைநகர் புது டெல்லி – மேரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த திட்டமிடப்படுகிறது. வடஇந்திய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆர்ஆர்டிஎஸ் ரயில் திட்டம் தமிழ்நாட்டிலும் அமைக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையின்போது தெரிவித்திருந்தார்.

இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் என்பது என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். அதாவது இந்திய வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும். இது நகரங்கள் மற்றும் புறநகரங்களை இணைக்கும் வேக ரயில் போக்குவரத்து அமைப்பாகும். டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும். இந்த ரயிலானது மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும். ஏசி கோச்சுகள், ஒய்-பை ஆட்டோமெட்டிக் கதவுகள், வேகமான பயணம், மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு உகந்தது, மின்சாரத்தில் இயங்கும், குறைந்த கார்பன் அடையாளம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

தற்போது இவை டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் அவ்வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்திட, சென்னை- செங்கல்பட்டு-திண்டிவனம்-விழுப்புரம் (167 கி.மீ.,), சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் (140 கி.மீ.,), கோவை-திருப்பூர்-ஈரோடு-சேலம் (185 கி.மீ.,) ஆகிய 3 வழித்தடங்களில் ரயில்களை இயக்கிட சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதை சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்பின்படி, இந்த 3 வழித்தடங்களில், பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து சேவையை உருவாக்கிட, விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் சார்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்நிலையில், சாத்தியக்கூறு தயாரிப்பது குறித்த சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. 6 மாதங்களில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
வழித்தடம், நிறுத்தங்கள் அமைவிடம், தேவையான நிலம் மற்றும் செலவு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். இதன் பிறகு திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் பரிசீலனை செய்யப்படும். இதனைத் தொடர்ந்து இந்த திட்ட அறிக்கை தமிழக அரசிடம், திட்டம் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு திட்டம் ஒப்புதல் அளித்த பிறகு, முழுமையான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மண்டல ரயில் போக்குவரத்து சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: