திருப்பூர்,மே17: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதாரம் மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இவற்றைப் பெற சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டம் – 1 ன் கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் இருந்தால், 6 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். திட்டம் 2ன் கீழ் ரூ.8 லட்சம் ஆண்டு வருமான வரம்பில், ஆண்களுக்கு 8 மற்றும் பெண்களுக்கு 6 சதவீத வட்டியில், ரூ.30 லட்சம் வரை கடன் பெறலாம்.கைவினை கலைஞர்களுக்கு 10 லட்சம். மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் கல்விக் கடன் வழங்கப்படும். இதில் பயன்பெற, கடன் விண்ணப்பத்துடன், மதச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ்,ரேஷன் அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார், திட்ட அறிக்கை மற்றும் கடன் வழங்கும் வங்கி கோரும் ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதே போல் கல்விக் கடனுக்கு இவற்றுடன் கல்வி நிறுவனம் வழங்கும் சான்றிதழ்கள் இணைக்க வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை மதத்தினர், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட,மத்திய, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் இந்த விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிறுபான்மையின மக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.