சென்னை: ராமதாஸ் செயல்பாட்டுடன் இருக்கும்போதே அவரை ஓரங்கட்ட அன்புமணி முயற்சிக்கிறார் என்று காசிமுத்துமாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் அதிராமபட்டினத்தில், திமுக 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தெருமுனை கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது: ராமதாஸ் மாநாடு நடத்தி உள்ளார். அதில் அன்புமணி திமுகவை தாக்கியிருக்கிறார். பா.ம.க.வினர் மூன்று விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று திமுகவிடம், பாமக இருந்த போது அங்கீகாரத்துடன் இருந்தது. பா.ஜ.க. பின் சென்று அங்கீகாரத்தை இழந்தது.
இரண்டாவதாக திமுகவிடம் சென்றபோது எம்.பி. கூட இல்லாத அன்புமணி, கலைஞரின் செல்வாக்கால் ஒன்றிய காபினெட் அமைச்சராக்கி சில மாதம் கழித்து ராஜ்யசபை உறுப்பினராக்கப்பட்டார். ஆனால் மக்களவைக்கு திமுக, அதிமுக இல்லாமல் பாஜ கூட்டணியில் வென்ற அன்புமணி 2019ல் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர், பாஜவால் அமைச்சராக்கப்படவில்லை. ஆக திமுகவுடன் இருந்தால்தான் ஒன்றிய அமைச்சர், திமுக இல்லாத கூட்டணியால் அமைச்சராகவில்லை. மூன்றவதாக 96 வயதிலும் கலைஞரின் தலைமையையே தளபதி ஏற்றார். ஆனால் அய்யா செயல்பாட்டுடன் இருக்கும் போதே அன்புமணி அவரை ஓரம் கட்ட முயற்சிக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் உயிருடனிருக்கும் போதே அகிலேஷ் யாதவ் எப்படி அவரை கட்சியை விட்டு நீக்கி அசிங்கப்படுத்தினாரோ, அதேபோல் அன்புமணி தன்னுடைய தந்தையை அசிங்கப்படுத்த நினைக்கிறார். பரூக் அப்துல்லா செயல்பாட்டுடன் இருக்கும் போதே உமர் அப்துல்லா முதல்வர் பதவிக்கு வந்தது போல அய்யா இருக்கும் போதே தலைமை பவருடன் தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறார் அன்புமணி. இவ்வாறு அவர் பேசினார்.
The post ராமதாஸ் செயல்பாட்டுடன் இருக்கும்போதே ஓரங்கட்ட முயற்சிக்கிறார் அன்புமணி: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பேச்சு appeared first on Dinakaran.