டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோஹ்லி ஓய்வு ஏன்?: சொல்கிறார் ரவி சாஸ்திரி

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோஹ்லியின் நெருக்கமான ஆலோசகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இந்த நிலையில், விராட் கோஹ்லி ஓய்வு முடிவு குறித்து ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: கோஹ்லி ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வாரம் முன்பாகவே நாங்கள் பேசினோம். அவரது மனநிலை அப்பொழுது தெளிவாகவே இருந்தது. `நமக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டோம்’ என்ற மனநிலையில் அவர் இருந்தார். அவர் எந்த வருத்தத்தையும் உள்ளே வைத்துக் கொள்ளவில்லை. நான் தனிப்பட்ட முறையில் சில கேள்விகளை அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் மிகவும் தெளிவாக பதில் கூறினார். அவர் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுதான் சரியான நேரம், உடலும், மனமும் இதுதான் சரியான நேரம் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறது. அவர் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தால், அதில் 100% தனது அர்ப்பணிப்பைக் கொடுக்க நினைக்கிறார். அதை அத்தனை எளிதாக நாம் அனைவராலும் செய்துவிட முடியாது. ஒரு வீரர் ஒரு வேலையைச் செய்யும்போது நாம் பின்னாடி அமர்ந்து கொள்ளலாம். ஆனால், கோஹ்லி அணியுடன் ஆடுகளத்தில் இருந்தால், அவர் அனைத்து விக்கெட்டுகளையும் எடுக்கிறார், அவர் அனைத்து கேட்ச்சுகளையும் பிடிக்கிறார், அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்க வேண்டும் என்பது போலத்தான் இருக்கும். அவரது ஈடுபாடு அவ்வளவு தாக்கத்துடன் இருக்கும்.

அது போல சூழலில் இருக்கும்போது, ஏதோ ஒரு கட்டத்தில் அது தொய்வை ஏற்படுத்தலாம். அவர் ஓய்வு இன்றி தவிக்கும்போது, அவர் ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திலும் எவ்வளவு விளையாட வேண்டும் எனப் பிரித்துப் பார்க்காதபோது, இதுபோன்ற தொய்வு ஏற்படும். உலகம் முழுவதிலும் கோஹ்லி தனது சாதனைகளை செய்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம் விராட் கோஹ்லிக்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

விராட் கோஹ்லி மிக எளிதாக எதிர் அணி ரசிகர்களை கோபமடையச் செய்துவிடுவார். அந்த அளவுக்கு ரசிகர்களின் ஆழ் மனதுக்குள் சென்றுவிடுவார். அவர் கொண்டாடும் முறை, அதன் தாக்கம் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஓய்வறை மட்டுமல்ல, மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீட்டின் அறையிலும் அது மிக வேகமாகப் பரவும். நான் விராட் கோஹ்லி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், அவரது முடிவு எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது.இவ்வாறு கூறினார்.

The post டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோஹ்லி ஓய்வு ஏன்?: சொல்கிறார் ரவி சாஸ்திரி appeared first on Dinakaran.

Related Stories: