நாட்டு வெடி வெடித்து மின்வாரிய ஊழியர் படுகாயம் குடியாத்தம் அருகே சாலையில் கிடந்த

குடியாத்தம், மே 15: குடியாத்தம் அருகே சாலையில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் மின்வாரிய ஊழியர் படுகாயமடைந்தார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (26), மின் ஊழியர். இவர் குடியாத்தம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் சாய்ந்த மின்கம்பத்தை சீர்செய்யும் பணிக்காக நேற்று முன்தினம் தனது பைக்கில் சென்றார். ஜெ.ஜெ. நகரில் உள்ள சாலையோரம் பந்துபோன்ற ஒரு பொருள் கிடந்தது. அதன் மீது இவரது பைக் ஏறி இறங்கியது. அப்போது அந்த பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பைக்கின் முன்பக்க டயர் வெடித்ததோடு, பாஸ்கரின் கால்களிலும் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்த பாஸ்கரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் மின்கோட்ட பொறியாளர் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சாலையில் பந்து போன்று கிடந்த பொருள் நாட்டு வெடிகுண்டு என்பதும், அதன் மீது பைக் ஏறி இறங்கியபோது வெடித்து சிதறியதும் தெரிந்தது. இதை சாலையில் வீசியவர்கள் யார்? என தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நாட்டு வெடி வெடித்து மின்வாரிய ஊழியர் படுகாயம் குடியாத்தம் அருகே சாலையில் கிடந்த appeared first on Dinakaran.

Related Stories: