டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடப்பதால் ஆஸி, தெ.ஆ வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்: மீண்டும் களைகட்டுமா ஐபிஎல்?

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதால், ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கும் சூழ்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்ததால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. அதன் பின், சில நாட்களுக்கு முன் இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதால், வரும் 17ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் துவங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை மீதமுள்ள லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இறுதிக்கட்டமாக, குவாலிபையர் 1, வரும் 29ம் தேதியும், எலிமினேட்டர், மே30ம் தேதியும், குவாலிபையர் 2, ஜூன் 1ம் தேதியும், இறுதிப் போட்டி, ஜூன் 3ம் தேதியும் நடைபெற உள்ளன. ஐபிஎல் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் இங்கிலீஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ஜோஷ் ஹசல்வுட், டிம் டேவிட், பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட ஆஸ்திரேலியா வீரர்களும், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஹென்ரிச் கிளாசன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரபாடா, மில்லர், மார்கோ யான்சென், குவின்ட் டிகாக், மார்க்ரம், லுங்கி நிகிடி, ரிக்கெல்டன் உள்ளிட்ட பல வீரர்களும் ஆடி வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டனில் வரும் ஜூன் 11ம் தேதி துவங்க உள்ளது. இப்போட்டிகளில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா டெஸ்ட் அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் போட்டிகள் முடிவதற்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி துவங்குவதற்கும் இடையே குறைந்த நாட்களே உள்ளதால், இந்த அணிகளை சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The post டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடப்பதால் ஆஸி, தெ.ஆ வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்: மீண்டும் களைகட்டுமா ஐபிஎல்? appeared first on Dinakaran.

Related Stories: