திருப்பூர், மே 13: உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 12ம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பெருச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தியதோடு ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து செவிலியர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். சமூக ஆர்வலர்கள், பொதுமக்களும் செவிலியர்களுக்கு தங்கள் செவிலியர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
The post அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா appeared first on Dinakaran.