தாராபுரம்,மே24: திண்டுக்கல் மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பிரதீப் (42). இவரது மனைவி பெரியநாயகி(35), தம்பதியர் மகன் சித்ரன், மகள் சைந்தவியுடன் நேற்று பழனி சென்று விட்டு மீண்டும் உறவினர் வீட்டுக்குச் செல்ல தங்களது காரில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச் சாலையில் தெக்கலூர் தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது ஸ்பீடு பிரேக் மீது பிரதீப் மெதுவாக காரை ஏற்றி உள்ளார். அப்போது இவர்கள் பின்னே வேகமாக வந்த லாரி காரின் மீது மோதியது.இதில் நிலை தடுமாறிய கார் வலதுபுற சாலையில் கவிழ்ந்து விழுந்தது. விபத்து நடந்த பின்னர் அங்கிருந்து லாரி டிரைவர் லாரியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பெரியநாயகிக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கார் மீது லாரி மோதிய அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதல் தம்பதியர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.