நீலகிரியில் களை கட்டிய கோடை சீசன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா பயணிகள் கொண்டு வரக்கூடாது

ஊட்டி, மே 13: கோடை சீசன் களைகட்டிய நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 19 வகையாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துபவர்கள் அவற்றை பயன்படுத்தி விட்டு பொது இடங்கள், வனங்களில் வீசி எறிகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்களில் 1 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த தடை அமலில் உள்ளது. மாவட்டத்திற்குள் நுழைவும் அனைத்து வாகனங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து சோதனை சாவடிகளில் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை குறித்து சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், சுற்றுலா தலங்களில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி எடுத்து வந்தால் அபராதம் விதிக்கப்படும். சுற்றுலா பஸ்களில் கொண்டு வந்தால், சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி பஸ் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். எனவே சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் சுற்றுலா பஸ் ஓட்டுநர்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வர வேண்டாம் என தங்கள் பஸ்களில் பயணிப்போரிடம் தெரிவிக்க வேண்டும். நீலகிரிக்கு சுற்றுலா வரும் சிலர் பஸ்கள், கார்களிலேயே படுத்து உறங்குகின்றனர். இது பாதுகாப்பானது கிடையாது.

ஏனென்றால் சிறுத்தை, காட்டு மாடு, யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுலா வாகனங்களில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி எடுத்து சிலிண்டர்கள் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக, ஈடுபடும் பட்சத்தில் வாகனம் பறிமுதல் செய்யப்படும்’’ என்றார்.

The post நீலகிரியில் களை கட்டிய கோடை சீசன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா பயணிகள் கொண்டு வரக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: