வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி

 

காட்டுமன்னார்கோவில், மே 8: வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கு விருதாங்கன் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(48), விவசாயி. இவர் நேற்று வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது மின்சாரம் இல்லாததால் மின் மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால் மோட்டார் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, மின்சப்ளை சரிவர வராதது தெரிந்து, அங்குள்ள மின்மாற்றியில் மின் இணைப்பை சரி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வடிவேலு உயிரிழந்தார்.

பின்னர் வயலுக்கு சென்ற தந்தை வீட்டுக்கு வராததால், அவருடைய மனைவி ஷீலா மற்றும் மகன் விக்னேஷ் ஆகியோர் வயலுக்கு சென்று பார்த்தபோது, மோட்டார் கொட்டகையில் வடிவேலு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: