புதுச்சேரி, மே 15: புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக மர்ம நபர் தொடர்பு கொண்டு, ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண், மர்ம நபர் கூறிய, போலி டிரேடிங் வெப்சைட்டில் மர்ம நபர் கூறியபடி டாஸ்குகளை முடித்துள்ளார். மேலும், அந்த வெப்சைட்டில் ரூ.42,799 செலுத்தியுள்ளார். ஆனால் பகுதிநேர வேலைக்கான ஊதியம் கிடைக்கவில்லை, செலுத்திய பணத்தையும் அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை இளம்பெண் உணர்ந்தார். இதேபோல், சமூகவலைதளத்தில் குறைந்த விலைக்கு ஐபோன் விற்பதாகக்கூறிய விளம்பரத்தை நம்பி மணவெளி பகுதியை சேர்ந்த வாலிபர் ரூ.5 ஆயிரம் செலுத்தி ஏமாந்துள்ளார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆண் நபரிடம், குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் தருவதாகக்கூறி ரூ.37,311ஐ மர்ம நபர் மோசடி செய்துள்ளார். இது குறித்து மேற்கண்ட 3 பேரும், ஆன்லைன் போர்ட்டல் மூலமாக புகார் செய்துள்ளனர். அதன்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பகுதிநேர வேலை, குறைந்த வட்டியில் கடன் எனக்கூறி இளம்பெண் உள்பட 3 பேரிடம் ஆன்லைன் மோசடி appeared first on Dinakaran.