உடுமலை, ஏப்.29:உடுமலை நகராட்சியை ஒட்டிய பகுதியாக கணக்கம்பாளையம் ஊராட்சி உள்ளது. நகரத்துக்கு இணையாக வேகமாக வளர்ந்து வரும் இந்த ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கணக்கம்பாளையம் ஊராட்சி ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் உடுமலை நகராட்சியுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்கக் கோரும் கவன ஈர்ப்பு விளக்க கூட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்றது.இந்த கூட்டத்துக்கு கணக்கம்பாளையம் ஊராட்சி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாப்புசாமி தலைமை தாங்கினார்.
செயலாளர் செல்வராஜ்,பொருளாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நகரமாக மாறி வரும் கணக்கம்பாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தெரு விளக்குகள் போன்ற வசதிகள் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சிப்பாதையில் பயணிக்கவும் நகராட்சியுடன் இணைப்பது சிறந்த முடிவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
The post கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க கோரி கவன ஈர்ப்பு விளக்க கூட்டம் appeared first on Dinakaran.