திருப்பூர், மே 29: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சிறுபூலுவபட்டியில் இருந்த வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு குமார் நகரில் இடம் வாங்கி கட்டுமான பணிகள் நிறைவந்து 5 தளங்கள் கொண்ட புதிய கமிஷனர் அலுவலகத்தை காணொலி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனர், உதவி கமிஷனர் அலுவலகங்கள், மாநகர மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீஸ் நிலையம் போன்றவற்றை செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாஸ்போர்ட் சரிபார்ப்பு அலுவலகம் மற்றும் பல்வேறு பிரிவுகளும் உள்ளது. மொத்தமாக இதில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் பேருந்து மூலம் வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் புகார் அளிக்க வருவதும், விசாரணைக்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கமிஷனர் அலுவலகத்திற்கு என தனியாக பஸ் நிறுத்தம் இல்லை. குமார் நகரில் பஸ்களை நிறுத்துவிட்டு எடுத்தால் பிறகு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்ததில் தான் நகர பேருந்துகளை நிறுத்துகிறார்கள். இதனால், கமிஷனர் அலுவலகத்திற்கு வரும் பணியாளர்களும், பொதுமக்களும் குமார் நகரில் இறங்கி கமிஷனர் அலுவலகத்திற்கு நடந்து வர வேண்டிய சூழல் உள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் பஸ் ஸ்டாப் என பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அங்கு பஸ்களை நிறுத்துவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: புகார் கொடுக்க கமிஷனர் அலுவலகம் வரும்போது பஸ்களில் தான் வர வேண்டியதுள்ளது. அதனால், கமிஷனர் அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தம் அமைத்துக் கொடுத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். குமார் நகரில் இறங்கி நடந்து வரும் போது சாலையை கடக்க முடியாமல் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதனால் பஸ் நிறுத்தம் என்ற பலகை பெயரளவில் இல்லாமல் போக்குவரத்து கழகம் பஸ் நிறுத்தத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இது குறித்து போக்குவரத்து கழக பொதுமேலாளரிடம் கேட்டபோது“ போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி போலீஸ் கமிஷனர் அலுவலம் முன்பு விரைவில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படும்” என கூறினார்.
The post சாலையை கடந்து வருவதால் விபத்து அபாயம்: போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.