பல்லடம், மே 28: பல்லடம் தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என பாஜக சார்பில் தபால் துறைக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி பல்லடம் நகர பாஜக கட்சி தலைவர் பன்னீர் செல்வக்குமார் பல்லடம் துணை தபால் நிலைய அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் நகர் பகுதியில் அமைந்துள்ள பல்லடம் துணை தபால் நிலையம் கடந்த 11.06.1967-ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேற்படி தபால் நிலையத்தில் ஆதார் சேவை தரவு உள்ளீட்டாளர் பணிக்கு நிரந்தர பணியாளர் இல்லாத காரணத்தினால் ஆதார் திருத்தம் செய்ய வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும், பல்லடம் சுற்று வட்டார பகுதியில் உள்ளுர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வசித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி இல்லாமல் தனியார் ஏஜெண்டுகளை அணுகி சேவை கட்டணம் மிக அதிகமாக கொடுத்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
இதனால், கூலித்தொழிலாளிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், பல்லடம் துணை தபால் நிலைய அலுவலகத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 58 வருடங்களுக்கும் மேலானதால், தற்போது கட்டிடம் பராமரிப்பின்றி சுவர்களில் ஆங்காங்கே பிளவுகள் ஏற்பட்டு பழுதடைந்துள்ளது.
பல்லடம் துணை தபால் நிலைய வளாகத்தின் முன்பகுதியில் ஒரு சிமெண்ட் சீட் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் அமைத்து அதற்கென தனி தரவு உள்ளீட்டாளரை பணியமர்த்திட வேண்டும். மேலும், பல்லடம் பகுதி வாழ் மக்களின் நலன் கருதி மேற்படி தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பதிவு மையம் அமைத்திட வேண்டும். தபால் நிலைய கட்டடத்தை புனரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.