கோயிலுக்கு திருட சென்றபோது உண்டியலில் கை மாட்டியது: விடிய, விடிய காத்திருந்த திருடன் கைது

தர்மபுரி: தர்மபுரி அருகே நள்ளிரவு நேரத்தில், கோயில் உண்டியலில் பணம் திருட முயன்றபோது, உண்டியலில் கை சிக்கி கொண்டதால் விடிய, விடிய காத்திருந்த திருடனை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள சேஷம்பட்டி கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயிலுக்குள் புகுந்த மர்மநபர், அங்குள்ள உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது, உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கை உண்டியலின் உள்ளே சிக்கி கொண்டது. நீண்டநேரமாக போராடி உண்டியலில் இருந்து கையை எடுக்க முயன்றும், முடியவே இல்லை. இதனால், செய்வதறியாமல் விடிய, விடிய உண்டியலில் கை மாட்டிய நிலையிலேயே, அந்த நபர் சோகமே உருவாக அங்கேயே அமர்ந்திருந்தார்.

இதனிடையே நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், உண்டியலுக்குள் கை மாட்டி கொண்ட நிலையில், நபர் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வந்த போலீசார், உண்டியலுக்குள் கம்பியை விட்டு, நெம்பி அவரது கையை வெளியே எடுத்து மீட்டனர். இதையடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். அதில், அவர் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த தங்கராஜ்(43) என்பது தெரிந்தது. கூலி தொழிலாளியான இவர், சிறுசிறு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கோயிலுக்கு திருட சென்றபோது உண்டியலில் கை மாட்டியது: விடிய, விடிய காத்திருந்த திருடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: