பெரணமல்லூர், ஏப்.11: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் மிகவும் பிரசித்தி திருமணி சேறையுடையார் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாதம்தோறும் பவுர்ணமி கிரிவலம் மற்றும் பிரதோஷ விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று பங்குனி மாதம் வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு மாலை 5மணிக்கு மேல் மூலவருக்கு முன் அமைந்திருக்கும் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதன் பின்னர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் நன்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோயில் வளாகத்தில் உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பெரணமல்லூர் பேரூராட்சியில் அமைந்த திருக்கரைஈசுவரர், பெரியஏரி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நடந்த விழாவில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல் ஆரணி, செங்கம், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, தண்டராம்பட்டு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
The post திருவண்ணாமலையில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை appeared first on Dinakaran.