கண்ணமங்கலம், மே 21: கண்ணமங்கலம் அடுத்த பெரிய ஐய்யம்பாளையம் மலையடிவாரத்தில் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் ₹6 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பேரூராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மேற்கொள்ள முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பணிகளை நிறுத்தக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார், செயல் அலுவலர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினார். அதில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இங்கு அமைவதால் நிலத்தடி நீரோ அல்லது சுற்றுச்சூழலோ எந்தவிதத்திலும் பாதிக்காது. இதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. போளூர், சேத்பட்டு, வேட்டவலம் பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறினர். இதற்கிடையில், தகவலறிந்து வந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ெபாதுமக்கள் எதிர்ப்பு போலீசார் சமரசம் கண்ணமங்கலம் அருகே appeared first on Dinakaran.