ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு அடுத்த மாதம் 20, 21ம் தேதிகளில் நடத்த முடிவு

திருவண்ணாமலை, மே 22: ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கலெக்டர் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், இயற்கை பேரழில் நிறைந்த ஜவ்வாதுமலையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான கோடை விழாவை அடுத்த மாதம் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சிகள் 2 நாட்கள் நடத்துவது, பொழுதுபோக்கு அம்சங்களை அதிக அளவில் ஏற்பாடு செய்வது, சிறப்பு பஸ்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், அரசுத்துறைகளின் சார்பில் அதிக எண்ணிக்கையில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.

 

The post ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு அடுத்த மாதம் 20, 21ம் தேதிகளில் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: