மகாராஷ்டிராவில் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடத்துக்கு சிவசேனா (உத்தவ்) எதிர்ப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜ தலைமையிலான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் இம்மாநில அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு 3வது மொழியாக, இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை 2020ன்படி வெளியான இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான சிவசேனா (உத்தவ்) செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘அரசு அலுவல் மொழியாக மராத்தி இருக்கையில் இந்தி போதிக்க தேவையில்லை. முதலில் மராத்தியை முழுமையாக கட்டாயமாக்குங்கள். பணி, தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலில் மராத்திக்கு மதிப்பு கிடைப்பது அவசியம். இந்தி மொழியின் பாலிவுட் பட உலகம் இங்குதான் உள்ளது. இந்தி மொழி பாடல்களை நாம் ஏற்கனவே பாடுகிறோம்.

இதன் பிறகுமா எங்களுக்கு இந்தி போதிக்கிறீர்கள்? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் இந்தியை போதியுங்கள். மகாராஷ்டிராவில் மராத்திதான் முதல் தேவை. இந்தி மீதான காதல் நாடு முழுவதிலும் உள்ளபோது அதை பள்ளி பாடங்களில் திணிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றார்.

இதுகுறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், ‘நமது தாய்மொழியான மராத்திக்கு எப்போதும் முதல் முன்னுரிமை உண்டு. வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் சிலர் இந்தியை பிரச்னையாக்குகிறார்கள். நாட்டில் ஆங்கிலம் போல இந்தியும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது’ என்றார்.

The post மகாராஷ்டிராவில் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடத்துக்கு சிவசேனா (உத்தவ்) எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: